கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம்! – சீறிய பிரேமலதா விஜயகாந்த்

வெள்ளி, 31 ஜனவரி 2020 (12:16 IST)
2021 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவுக்கு மக்களிடம் இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு உதாரணமாய் உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமைந்திருப்பதாக பேசியுள்ளார்.

மேலும் அதிமுக கூட்டணியில் இருப்பது குறித்து பேசிக் கொண்டிருந்த பிரேமலதா “கூட்டணியில் இருப்பதால் குட்ட குட்ட குனியமாட்டோம். குட்டு வாங்கும் சாதி இல்லை நாங்கள். வருகிற 2021ல் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்று கூறியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பேசியிருப்பது கூட்டணியில் தேமுதிகவிற்கு உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக தனது கூட்டணியை தொடருமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைக்கும் என எச்.ராஜா பேசியுள்ள நிலையில் தற்போது அதே கூற்றை தேமுதிகவும் முன்வைப்பது அதிமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்