கவிதைகளால் உலகை அளந்த கவிஞர் வைரமுத்து - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

திங்கள், 13 ஜூலை 2020 (16:34 IST)
தேனி மாவட்டம் வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள மெட்டூரில் கடந்த 1953 ஆம் வருடம் ஜூலை மாதம் 13 ஆம் தேது  தமிழகத்தில் ஒரு கவிதைமுத்து பிறக்கிறது. அது தமிழுக்குக் கிடைத்துள்ள வைரம் என்பதை பின்னாளில் இதே தமிழகம் அவர் சிறந்த சினிமாப் பாடலாசிரியருக்கான விருதை ஏழுமுறை டெல்லி சென்று பெற்றபோது உணர்வுப்பூர்வமாகவும் உண்மைப்பூர்வமாகவும் கண்டுகொண்டது. இப்போதும் இந்தத் தமிழ்ச் சமூகம் கண்ணாரக் கண்டு வருகிறது.
 

மரபுக் கவிதையின் வேரும் புதுக்கவிதையின் மகரந்தமும் கண்ட கவிப்பேரரசின் கவிதை வரிகளும், அவர் கோலோட்சிக் கொண்டுள்ள சினிமாத்துறையில் அவரது செம்மாந்த தமிழ் மொழியின்  கைவண்ணத்தில் உருவாகின்ற பாட்டுகளாக இருந்தாலும், அவை பாமரன் முதல் பண்டிதன் வரை  ரசிக்காத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவியரசு கண்ணதாசன், கவியரசு வாலிக்குப் பிறகு தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. இந்தப் புகழின் நீட்சி தமிழகத்தைத் தாண்டி, வட இந்தியாவைக் கடந்து, உலகின் பல பகுதிகளிலும் அவரது பெயரைச் சொல்லி எதிரொலிக்கிறது.
 

’இதுவரை நான்’ என்ற தனது சுயசரிதை உட்பட இதுவரை முப்பத்தியேழு நூல்களை எழுதியுள்ள கவிஞர் வைரமுத்துவின் நூல்கள் இலக்கியத்தின் சாரம் இல்லை அது அடுக்குமொழி வளர்த்த திராவிடத்தின் சாயல் உள்ளது என்றும் அவர் சிறந்த பாடலாசிரியரே தவிர சிறந்த இலக்கியவாதி அல்ல என்று எத்தனையோ முன்னணி எழுத்தாளர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் அவர் மீது கடுமையான விமர்சனங்களைத் தொடுத்தாலும் அவரது கவிராஜன் கதை, கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்ற அவரது தனித்தன்மையான எழுத்துநடையும் அவரது பண்பட்ட கிராமிய மொழிக்கலவையும் பேச்மொழியுடன் கைகோர்த்துக்கொண்டு எழுத்துநடையில் புதுபரிணாமம் பெற்று விஸ்வரூமெடுத்திருப்பதுடன் அவரது கவிதை கொஞ்சும் வாசகங்கள் அந்நூல்கள் முழுவதும் விரவியிருக்கும்.
 

அவரது பாடாலாசிரியர் துறையில்
 கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்ற  நிலையில் வைரமுத்துவுக்குப் பிறகு அந்தக் கவிச்சிம்மாசனத்தில் அமரப்போகின்ற கவிஞர் யார் என்பதைக் காண ஒட்டுமொத்த ரசிகர்களும், கவிஞர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் வைரமுத்து தற்போது உட்கார்ந்திருக்கின்ற கவிப்பேரரசு என்ற சிம்மாசனம் அவரது தனியாத உழைப்பாலும், தீராத வாசிப்பாலும், வேறு எவரும் சிந்தித்திராத புதுமைக்கோணத்தில் சிந்தித்தும் தனது மரபுக் கவிதையின் பிடிமங்களிலேயே நவீனக் கவிதைப் படிமங்களை உட்புகுத்தி, அதில்  அழகிய உருவகங்களையும், உவமைகளையும், உள்ளடக்கங்களையும்  அறிவொளியைப் போலப் பாய்ச்சி அதைத் தனது தேன்தமிழ் வார்த்தைகளின் மூலம் ரசிகர்களுக்கு அவர் சினிமாப் பாடல் என்ற விருந்து வைப்பது என்பது அறுசுவை உணவு போல் காலத்திற்கும் மறக்கமுடியாதபடி நியாபகத்தில் நிலைத்து நிற்கும் ரகம்.  இதற்கு நிழல்கள் படத்தில் அவர் எழுதிச் சினிமா பிரவேசம் செய்த ’இதுவொரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலே சிறந்த உதாரணம்.

இது அவரது உயரத்துக்கு வர நினைக்கின்ற கவிஞர்களுக்கும், பாடலாசிரிகளுக்கும் அவரது உழைப்பைக் காட்டிலும் அசுர உழைப்புத் தேவை என்பதையே சுட்டிக் காண்பிக்கிறது.

இந்த உயரத்தைத் தனது திறமையாலும் உழைப்பினாலும் நிர்ணயித்துள்ள கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அவரது அறுபத்தி ஆறாவது அகவையில் இனிய பிறந்த நாளுடன் கூடிய கவிவாழ்த்துகள்.

சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்