சென்னையில் கொரோனா பணிகளில் ஆர்.எஸ்.எஸ்! – ட்ரெண்டாகும் #ChennaiCorpRemoveRSS

புதன், 15 ஏப்ரல் 2020 (09:56 IST)
சென்னையில் கொரோனாவுக்கு எதிரான தன்னார்வலர்கள் சேவையிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நீக்க சொல்லி சமூக வலைதளங்களில் கோரிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு 200 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்பேரில் சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் சாலை பாதுகாப்பு பணிகள், வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ம் கொரோனா பாதுகாப்பு பணிகளில் சென்னை மாநகராட்சியோடு இணைந்து பணியாற்றுவதாக தெரிகிறது.

இதற்கு பலர் சமூக வலைதளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பின்புலத்திலேயே மதரீதியான குற்றங்களில் தொடர்புடைய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகள் கையில் காவல் பணிகளை வழங்கக்கூடாது என வலியுறுத்தி பலர் #ChennaiCorpRemoveRSS என்ற ஹேஷ்டேகை ஷேர் செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இதற்கு பதிலளித்துள்ள சிலர் பேரிடர் காலங்களில் அந்த அமைப்பு பல இடங்களில் உதவிகள் செய்த புகைப்படங்களை பதிவிட்டு ஆர்.எஸ்.எஸ் மீது தவறான கருத்தியலை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்