’’அம்மாவின் உண்மைத்தொண்டன்...’’ சசிகலாவை வாழ்த்திய ஓபிஎஸ் மகன் !!

வியாழன், 28 ஜனவரி 2021 (19:29 IST)
சசிகலாவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரை கட்சி தலைமை நீக்கிவரும் நிலையில், தற்போது சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளார்.

அவரை பிரமாண்டமான முறையில் வரவேற்க அமமுக பொதுச்செயலாளர் தினகரன், உள்ளிட்ட சசிகலா ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவை வரவேற்றுப் போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பரப்பரப்பு நீங்காத நிலையில் அதிமுகவின் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவதுசசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ’’பெங்களூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி. சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மனநிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல; என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு இப்படிக்கு அம்மாவின் உண்மைத்தொண்டன் வி.பி.ஜெயபிரதீப் எனத் தெரிவித்துள்ளார்.


இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி என்ன கூறப்போகிறார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தினகரன் என்ன கூறப்போகிறார் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்