அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் - 100 பம்பைகள் முழங்க மயான கொள்ளை நிகழ்ச்சி..

J.Durai

புதன், 13 மார்ச் 2024 (09:21 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்  பிரசித்தி பெற்ற  அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
 
மகாசிவராத்திரியை முன்னிட்டு சாமி ஊஞ்சல் ஆடுதல், பூபந்தல், பூமாலை அலங்கரிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  
 
இதனை தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. முக்கிய நிகழ்வான மயானக்  கொள்ளை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
 
நிகழ்ச்சியை யொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், நடராஜர் உற்சவ மூர்த்திகள் அழைப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து அங்காளம்மன் சாமியை அலங்கரித்து பழைய பஸ் நிலையம் வழியாக சிங்க வாகனத்தில் 1000.க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
 
இதைத்தொடர்ந்து முத்துக்காளிபட்டி மயானத்தில் பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
 
அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டுவந்திருந்த ஆடு, கோழிகளை விரதம் இருந்து வந்திருந்த ஆடு கடிக்கும் பூசாரிகள் ஆக்ரோஷத்துடன் கடித்து மயானக்கொள்ளை நடத்தினர்.
 
25க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை உயிருடன் கடித்து மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு காவு கொடுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து முக்கிய வீதி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட பம்பைகள் முழங்க மயான கொள்ளை வேடம் அணிந்து வந்த சாமிகள் உற்சாக நடனமாடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 
 
இந்நிகழ்ச்சியில், ராசிபுரம், புதுப்பாளையம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், கட்டனசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் இதை காண வந்திருந்தனர்.
 
 
14-3-2024 மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன்  விழா நிறைவு பெறுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்