கலப்பு திருமணம் செய்த பெண் ஆணவக் கொலை: மேலும் 3 பேர் கைது

Sinoj

சனி, 13 ஜனவரி 2024 (14:03 IST)
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் மற்றும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாகப் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாகி, கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரிந்தது. இதையடுத்து,  ஐஸ்வர்யாவை  ஊருக்கு அழைத்தனர். அங்கு சென்ற ஐஸ்வர்யா  கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதுபற்றி யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை எரித்தனர்.

இவரது மரணத்தில் சந்தேகமடைந்து, இதுகுறித்து எல்லோருக்கும் தகவல் தெரியவே, கிராம நிர்வாக அலுவலர் அளித்தார்.

இதனடிப்படையில், போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஐஸ்வர்யா, நவீனோடு கலப்பு திருமணம் செய்த ஆத்திரத்தில், அவரது பெற்றோர் பெருமாள் மற்றும் ரோஜாவால்  கடந்த 3 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் யாருக்கும் தெரியாமல் குடும்பத்தினர் எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெற்ற மகளையே கொலை செய்த ஐஸ்வர்யாவின் பெற்றோரான பெருமாள் மற்றும் ரோஜவை  கடந்த 10 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில்,  பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சொந்த மகளையே கொலை செய்ய பெற்றோருக்கு உதவியாக 3 பேரும் இருந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணையில் உண்மை வெளியாகலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்