மனித சங்கிலி போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்

Arun Prasath

வியாழன், 19 டிசம்பர் 2019 (14:18 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி, மதுரை மாணவர்களும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

பின்பு இரவில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த போலீஸார் மாணவர்களை தாக்கினர். இதனை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டெல்லி மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் அம்மாணவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இவர்களை  போலவே நேற்று சென்னை நியூ கல்லூரி மாணவர்களும், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதே போல் கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இன்று கடலூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரை வக்பு வாரிய கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்