எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான் - ஸ்டாலின் கூறிய ரகசியம்

வியாழன், 2 நவம்பர் 2017 (13:42 IST)
நடிகரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அரசு செலவில் நடத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே புகார் கூறியிருந்தார். இதனால், அவர் எம்.ஜி.ஆருக்கு எதிரானவர் என்ற பிரச்சாரத்தை அதிமுகவினர் கையிலெடுத்தனர்.
 
இந்நிலையில், புதுக்கோட்டையில் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் “ குட்கா ஊழல், குவாரி ஊழல் என ரூ.400 கோடி அளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் செய்துள்ளதாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களார்களுக்கு பல கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததில் அவர் தலைமை வகித்தார் எனவும் வருமான வரித்துறை கண்டுபிடித்து அரசுக்கு அறிக்கை அளித்தது.
 
ஆனால், இந்த அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது தேசத்துரோக வழக்கு போடாமல், கதிராமங்கலம் பிரச்சனைக்கு போராடி வரும் பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு போடுகிறார்கள்.
 
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். பள்ளிப்படிப்பின் போது கட் அடித்து விட்டு எம்.ஜி.ஆர் படம் பார்க்க சென்றுவிடுவேன். எம்.ஜி.ஆர் விழாவை நடத்த வேண்டாம் என நான் கூறவில்லை. ஆனால், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அரசு அதை நடத்த வேண்டாம் எனத்தான் நான் கூறுகிறேன். அதிமுக தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடட்டும்” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்