சிறுமிக்கு பாலியல் தொல்லை; அடித்து கொன்று ஆற்றில் வீசிய குடும்பம்! – கும்பகோணத்தில் பரபரப்பு!

திங்கள், 6 ஜூலை 2020 (09:28 IST)
சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்து வந்த நபரை குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமோகன். டிராக்டர் ட்ரைவராக வேலை பார்த்து வரும் செல்வமோகன் சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் அவர் பிரிந்து சென்று விட்டதால் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழில்ரீதியாக அடிக்கடி அருகில் உள்ள கிராமம் ஒன்றிற்கு சென்று வந்த செல்வமோகன் அங்கு கூலிவேலை செய்து வரும் ஒருவரின் 17 வயது மகளிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது தந்தையிடம் கூறவே அவருக்கும், செல்வ மோகனுக்கும் மோதல் எழுந்துள்ளது. இந்நிலையில் செல்வமோகனை பட்டீஸ்வரம் அருகே உள்ள உள்ளிக்கடை பகுதிக்கு வரவழைத்த கூலித்தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர், செல்வமோகனை மிரட்டியுள்ளனர். அப்போது கைகலப்பானதால் செல்வமோகனை அடித்து கொன்ற குடும்பத்தினர் கைகளை கட்டி அவரை ஆற்றில் வீசியுள்ளனர்.

தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றுப்படுகையில் ஒதுங்கிய பிணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்க தொடங்கியபோது செல்வமோகனுக்கும், கூலி தொழிலாளிக்கும் மோதல் இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து கூலி தொழிலாளியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் மேற்கண்ட சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. அதன் அடிப்படையில் கூலி தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்