தமிழ் சமூகத்திற்கே அவமானம் –பொன்பரப்பி தாக்குதல் குறித்து கமல் ஆதங்கம் !

சனி, 20 ஏப்ரல் 2019 (15:12 IST)
பொன்பரப்பி சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் ம.நீ.ம. தலைவர் கமலும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று முன் தினம் பரபரப்பான சூழல் உருவானது. தாக்குதலில் காயம்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தொல் திருமாவளவன் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைக் கண்டித்து தமிழக அரசியல் தலைவர்களான ஸ்டாலின், திருமா வளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ``பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்’ எனத் தெரிவித்தார். மேலும் அந்த பாடல் வரிகளையும் கீழே குறிப்பிட்டுள்ளார்.

மதங்கொண்டு வந்தது சாதி -
இன்று மனுஷனைத் துரத்துது
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி - இங்கு 
ரத்தம் வெறி கொண்டு ஆடுது பூமி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்