கஜா புயல்: கேரள முதல்வரிடம் உதவி கேட்ட கமல்ஹாசன்

செவ்வாய், 27 நவம்பர் 2018 (10:11 IST)
சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் வீசிய கஜா புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்துவிட்டது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. மின் சீரமைப்பு பணியை தமிழக மின்சார்த்துறையினர் இரவுபகலாக செய்து கொண்டிருக்கும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தமிழகத்திற்கு கேரள மின் ஊழியர்களை அனுப்பியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான உதவிகளையும் அவர் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழத்திற்கு உதவி செய்யுமாறு கமல்ஹாசன் இன்று கேரள முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டாங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி கேரள அரசியனையும், மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்

கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் இப்பணியினை இன்றே தொடங்கிட வேண்டும்

பயிர்கள் சேதாரமடைந்து மரங்கள் வேருடன் சாய்ந்து படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உன்னதமான மானுடக்கருணையை உணர்த்திட வேண்டிய அத்தியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாலம். அதுதான் இன்று, இப்பொழுது, இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரள முதல்வர் செய்த உதவிகளை தனது கடிதம் கிடைத்த பின்னரே செய்ததாக காட்டிக்கொள்ளும் வகையில் கமல் உள்நோக்கத்துடன் கடிதம் எழுதியிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


Request support from @CMOKerala pic.twitter.com/8pR2qjydRE
— Kamal Haasan (@ikamalhaasan) November 27, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்