'' ஏமாற்றி நீட்டை திணிக்கும் பாசிஸ்ட்டுகள்''- அமைச்சர் உதயநிதி

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (20:35 IST)
இந்தியாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு அச்சம், தேர்வில் தோல்வியால பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நீட் விலக்கை வலியுறுத்தி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கம், அதன் இலக்கான 50 லட்சம் கையெழுத்துகளை குறிப்பிட்டக் காலக்கெடுக்குள்ளாகவே கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''இதுவரை இணைய வழியில் 40 லட்சம் - அஞ்சல் அட்டை மூலமாக 15 லட்சம் என 55 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து கையெழுத்திட்டு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் நீட் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நீட் எதிர்ப்புணர்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இது. எதிர்வரும் 17 ஆம் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையெழுத்துகள் குவிகின்ற வகையில் நாம் தொடர்ந்து செயலாற்றுவோம்.

மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒற்றைக் கையெழுத்தை பெறுவதற்காக நாம் பெற்றுக் கொண்டிருக்கும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தகுதி - தரம் என்று ஏமாற்றி நீட்டை திணிக்கும் பாசிஸ்ட்டுகள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்