மக்களுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி அரசு - செந்தில் பாலாஜி பேட்டி (வீடியோ)

செவ்வாய், 5 ஜூன் 2018 (10:32 IST)
தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அரசு தான் எடப்பாடி பழனிச்சாமியின் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி பகுதியில் அரவக்குறிச்சி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார்.
 
அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு, சசிகலாவினாலும், டி.டி.வி தினகரன் அவர்களாலும் ஆட்சியை பெற்று, முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அதற்கு உதாரணம் தான் தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு.
 
அதே போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்துவதற்காக டி.டி.வி தினகரன் பாடுபட்டு வருகின்றார். ஆனால், தமிழகத்தின் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, பா.ஜ.க அரசின் மோடியுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கும், தமிழக மக்களின் உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது.
 
ஆனால் விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலரும், அதற்கு டி.டி.வி ஒருவரால் தான் முடியும். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி மலரும் போது இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்க முடியும். நீட் தேர்வில் முறையான பயிற்சி கொடுக்காமல், தேர்வு நேரத்தில் தமிழகத்தில் முறையாக தேர்வு மையங்களை அமைக்காமல், வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத மாணவ, மாணவிகளை அனுப்பிய ஒரே அரசு தான் இந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, இன்று வரை அலட்சியமாக செயல்பட்டு வந்தது தான் நீட் தேர்வின் தேர்ச்சி விகிதத்திற்கு காரணம் என்றார். 
- சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்