திடீர் திருப்பம்: அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புறப்பட்டார் ஓபிஎஸ்

புதன், 30 செப்டம்பர் 2020 (11:53 IST)
கடந்த சில நாட்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்து வந்ததாகவும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கூட்டப்பட்ட அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் அரசு வாகனத்தை உபயோகிக்க போவதில்லை என்றும் கூறப்பட்டது 
 
மேலும் இன்று நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவரது பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஓ பன்னீர்செல்வம் திடீரென அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்து அதில் பங்கேற்பதற்காக புறப்பட்டு விட்டார் என்று கூறப்படுகிறது
 
இந்த திடீர் திருப்பத்தை அடுத்து முதல்வருடன் ஓபிஎஸ் சமாதானம் ஆகிவிட்டாரா அல்லது அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்