மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி எது? மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு:

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (06:12 IST)
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம் அளித்து தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி மே 6 வரை கால தாமத கட்டணம் இன்றி மின்கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்தி கொள்ளலாம். இதுகுறித்து மேலும் மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கோவிட்‌-19 பரவுதலால்‌ 24.03.2020 நள்ளிரவு முதல்‌ ஊரடங்கு அமல்படுத்தியதன்‌ காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ இடர்பாடுகளை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழக தாழ்வழுத்த மின்‌ பயனீட்டாளர்களின்‌ மின்னிணைப்புகளுக்கு மின்‌ கட்டணம்‌ மற்றும்‌ இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள்‌ 25.03.2020 முதல்‌ 14.04.2020 வரை இருக்குமாயின்‌, அதற்கான தாமதக்‌ கட்டணம்‌ மற்றும்‌ மின்‌ துண்டிப்பு/மறு இணைப்புக்‌ கட்டணமின்றி 14.04.2020 வரை கட்டணம்‌ செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
 
தற்பொழுது தமிழ்நாடு அரசு 30.04.2020 வரையிலான காலத்திற்கு ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத்‌ தொடர்ந்து 30.04.2020-க்கு பிறகு மின்கட்டணம்‌ செலுத்த வரும்‌ தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ இடர்பாடுகளை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்தின் அறிவிப்புகள்‌ கீழ்வருமாறு:
 
அ. தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ மின்கட்டணம்‌ மற்றும்‌ இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள்‌ 25.03.2020 முதல்‌ 30.04.2020 வரை இருக்குமாயின்‌, அத்தொகையினை செலுத்த 06.05.2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
 
ஆ. மார்ச்‌ 2020 மற்றும்‌ ஏப்ரல்‌ 2020 ஆகிய மாதங்களில்‌ 22.03.2020 முதல்‌ 30.04.2020 வரை மின்கட்டணம்‌ செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள்‌ அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம்‌ செலுத்தலாம்‌. இவ்வாறு செலுத்திய மின்கட்டணம்‌ பின்வரும்‌ மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில்‌ சரிகட்டல்‌ செய்யப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி 2020/பிப்ரவரி 2020/மார்ச்‌ 2020 ஆகிய மாதங்களில்‌ செலுத்திய தொகையையே மார்ச்‌ 2020/ஏப்ரல்‌ 2020 மின்கட்டணமாக செலுத்தலாம்‌).
 
இ) மேலும்‌, ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம்‌ வலைதள வங்கியியல்‌, கைபேசி வங்கியியல்‌, பேமண்ட்‌ கேட்வே, பிபிபிஎஸ்‌ (8875) முதலிய வழிகள்‌ மூலம்‌ பணம்‌ செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின்பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ கேட்டுக்‌ கொள்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்