ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (10:47 IST)
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. இதில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதற்குப் பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 2018 மே 28ஆம் தேதி அந்த ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லையெனக் கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 27-ம் உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

6 மாத காலமாக நடந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஆலையை திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்