பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு- அண்ணாமலை

சனி, 17 ஜூன் 2023 (17:33 IST)
பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’2018 முதல் 2022 வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே உச்சகட்ட உயிரிழப்பு தமிழகத்தில் தான்.

பெண்ணாடம் பேரூராட்சியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர், ஒரு தூய்மைப் பணியாளரை மலம் கழிந்த கழிவு நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து, அவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடையக் காரணமாக இருந்துள்ளார். குற்றம் செய்த அந்த பேரூராட்சி உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், இதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் மாநிலச் செயலாளர் திரு
எஸ்.ஜி. சூர்யா  அவர்களைக் கைது செய்துள்ளனர்.

பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட்டுகள் திமுகவின் கிளை அலுவலகமாகத்தான் செயல்படுகின்றனர். வியர்வை சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களிடம், பெயரளவில் சமூக நீதி பேசிக் காலம் காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் காலாவதியான கம்யூனிஸ்ட்டுகள்.

பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு’’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள  நிலையில், மதுரை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்