அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

Senthil Velan

வியாழன், 14 மார்ச் 2024 (18:05 IST)
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
 
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர் என்றும் இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வழக்கறிஞர் ரவிக்குமார் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு பொதுப்படையாக உள்ளது என்று தெரிவித்தனர். 

ALSO READ: பிரதமரின் வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்.! காங்கிரஸ் அறிவிப்பு...!!

முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்