பாஜகவின் ஒரு கோடி ரூபாய் சேலஞ்ச்! – சென்னையில் ஒட்டப்பட்ட நூதன போஸ்டர்கள்!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:57 IST)
ஒரு கோடி ரூபாய் சேலஞ்ச் போஸ்டர்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் பாஜகவினர் நூதனமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் இந்திய குடியுரிமை சட்டத்தால் யாரவது ஒருவர் பாதிப்படைந்ததாக நிரூபித்தால் கூட ஒரு கோடி ரூபாய் தர தயார் என வெளிப்படையாக சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்