மோடி அரசின் சிறுபான்மையின விரோத போக்கு- திருமாவளவன்

sinoj

திங்கள், 11 மார்ச் 2024 (22:00 IST)
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை  நாடு முழுவதும் இன்று முதல் அமல்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும்  நிலையில், '' இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும் கேடான முயற்சி''என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்தெரிவித்துள்ளதாவது:  

''குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 இன்று நடைமுறைக்கு வருவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. 
 
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும்; இந்துக்களாயினும்  இலங்கையைச் சார்ந்த தமிழர்களுக்கும் குடியுரிமை இல்லை என்கிறது இச்சட்டம். 
 
இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும் கேடான முயற்சி.   
 
தேர்தல் பத்திரங்களின் மூலம் பெற்ற நன்கொடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜகவுக்கு எதிராகவுள்ள நிலையில், அதனைத் திசை திருப்பும் தீங்கான சதிமுயற்சி. 
 
வங்கதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சமூகப் பிளவை உருவாக்கி அமைதியைச் சிதைத்து அரசியல் ஆதாயம் தேடும் அற்ப முயற்சி.
 
மோடி அரசின் இத்தகைய சிறுபான்மையின விரோத போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்