தன்னை அறியாமல் உண்மை சொன்ன ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.. அண்ணாமலை

Siva

புதன், 10 ஏப்ரல் 2024 (14:25 IST)
பருவ காலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே... குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே... இதோ இந்த கேரண்டிகளை தருவீர்களா? என முதல்வர் ஸ்டாலின் செய்த பதிவுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்தான், மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கிறார் என்ற உண்மையை, தன்னை அறியாமல் வெளிப்படுத்தியிருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுகவால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச் சந்தைக் கூடக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை, தமிழக முதலமைச்சருக்குத் தெரியாமலா இருக்கும்?

மகனும் மருமகனும் சேர்ந்து ரூ.30,000 கோடி ஊழல், மணல் கொள்ளை, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கனிம வளங்கள் கொள்ளை, கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை, காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, சிறைக்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என இத்தனைக் குழப்பங்களுக்கு மத்தியில், வழக்கமாக, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், தங்கள் குடும்பத்தின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2021 தேர்தலின்போது, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் மத்திய அரசிடம் நிறைவேற்றக் கோரியிருப்பது தான், இந்த நீளமான துண்டுச் சீட்டில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் அதனை அப்படியே வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

திமுகவும் காங்கிரஸும் கச்சத்தீவைத் தாரைவார்த்ததன் விளைவு, நமது மீனவர்கள், இத்தனை ஆண்டுகளாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அனைத்து மாநிலங்களும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்க, போலி சமூக நீதி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக. சொந்தத் தொகுதியை விட்டுவிட்டுத் தனித் தொகுதி என்பதற்காக 2G ராஜாவை நீலகிரிக்கு அனுப்பி வைத்திருக்கிறது திமுக. மலைக் கிராமங்களுக்குச் சாலை வசதியைக் கூட அமைத்துக் கொடுக்காமல், வெட்கமே இல்லாமல் சமூக நீதி பற்றிப் பேசுவதெல்லாம் தேவையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே?

நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்களும் மருத்துவக் கல்வி பெற ஒரு வரப் பிரசாதம். உங்கள் கட்சிக் காரர்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சம்பாதிக்க, நாங்கள் ஏன் நீட் தேர்வை விலக்க வேண்டும்? தமிழக மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தத் தயாரா? கையெழுத்து இயக்கம் என்று உங்கள் பட்டத்து இளவரசர் ஆடிய நாடகம் முடிவுக்கு வந்து விட்டதா?

கடந்த 2021 தேர்தலின்போது, 511 வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கூற தைரியம் இருக்கிறதா?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் எந்தச் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். முதலமைச்சர் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கூறுவது உங்கள் வழக்கமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகில்லை திரு. ஸ்டாலின் அவர்களே என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்