ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் – திமுகவைக் கலாய்க்கும் அதிமுக போஸ்டர்கள் !

வெள்ளி, 28 ஜூன் 2019 (13:12 IST)
அமமுகவில் இருந்து பிரிந்து சென்ற தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்துள்ளதை அடுத்து திமுகவைக் கூத்தாடி என்று மறைமுகமாகக் கேலி செய்யும் விதமாக அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் முதலில் அதிமுகவில் தான் இணைவதாக இருந்தார். ஆனால் துரோகிகளை சேர்க்காதீர்கள் என அதிமுகவினர் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மூலம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் யாரும் எதிர்பாராத விதமாக திமுகவில் இணைந்தார்.

இதனால் அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளுமே கலக்கத்தில் உள்ளனர். ஆட்சியைக் கலைக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடமும் திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியான செய்திகளால் அதிமுக தலைமையும் கிளியில்தான் உள்ளது. இதனையடுத்து ‘உஷார்.. உஷார்.. உஷார்.. ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்... அஇஅதிமுக எஃகு கோட்டை.. இதுவே புரட்சி தலைவர், புரட்சி தலைவி, ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் பொது வாக்காளர்களின் கட்டளை... கழகத்தின் இரு கண்கள் "காலத்தை வென்ற ஈபிஎஸ்", "காவியத்தலைவர் ஓபிஎஸ்’ எனத் தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதில் அதிமுகவில் ஓபிஎஸ்-க்கும் ஈபிஎஸ்-க்கும் இடையே நிலவும் அதிகாரப்போட்டியைக் குறிக்கும் விதமாக ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் எனக் கூறி திமுகவைக் கேலி செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்