என்ன கோபாலு.. இந்த பக்கம்! ஆட்டை திருடி உரிமையாளரிடமே விற்ற திருடன்!

வியாழன், 22 அக்டோபர் 2020 (13:01 IST)
மதுரையில் ஆடு திருடன் ஒருவர் ஆட்டை திருடி அதன் உரிமையாளர்களிடமே விற்க முயன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு காமெடி ஒன்றில் கோபால் என்ற நபரிடம் ஆடு திருடி மாட்டுவது போன்ற ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை நாகமலை அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவருக்கு சொந்தமான ஆட்டு மந்தையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 ஆடுகள் திருடு போயுள்ளன. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இந்நிலையில் கருப்பணனின் சகோதரர் ஒருவரிடம் பாலமுருகன் என்ற நபர் ஆடுகளை விற்க வந்துள்ளார். 6 ஆடுகளையும் அடிமட்ட விலைக்கு தர பாலமுருகன் ஒப்புக்கொண்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்

பாலமுருகனை பிடித்து போலீஸார் விசாரித்தபோது ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக ஒரு டெம்போ வாகனம் வைத்துள்ள பாலமுருகன் ஆடுகளை டெம்போவில் திருடி கிடைக்கும் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்ததையடுத்து போலீஸார் பாலமுருகனை கைது செய்துள்ளனர்.

ஆட்டை திருடி அதன் உரிமையாளர்களிடமே விற்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்