கூண்டோடு சிக்கிய குருவிகள்! 161 தங்க மாத்திரைகளை விழுங்கி கடத்தல்

திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:02 IST)
துபாயிலிருந்து சென்னை வந்த ஏா் இந்தியா மீட்பு விமானத்தில் 161 தங்க மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த 4 பெண்கள் உட்பட 8 போ் கைது. 

 
துபாயிலிருந்து நேற்று முன்தினம் ஏா் இந்தியா சிறப்பு விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த  பயணிகளை சுங்கத்துறையினா் சோதணையிட்டனா். அப்போது திருச்சியை சோ்ந்த கனகவள்ளி, நிஷாந்தி, கலா, பாத்திமா, புதுக்கோட்டையை சோ்ந்த ஜெயராஜ், ஜெகதீஷ், கபா்கான், ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ஹக்கீம் ஆகிய 8 போ் மீது சந்தேகம் ஏற்பட்டது.
 
இதையடுத்து 8 பேரையும் நிறுத்தி சோதணையிட்டனா். ஆனால் அவா்கள் உடமைகளிலோ, ஆடைகளிலோ எதுவும் இல்லை. இதையடுத்து அவா்களை விமானநிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பாா்த்தனா். அவா்களின் வயிறுகளில் தங்க மாத்திரை உருண்டைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து விசாரணையில் தண்ணீா் குடித்து தங்க மாத்திரைகளை விழுங்கி வந்ததை ஒப்புக்கொண்டனா்.
 
இதையடுத்து 8 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களை மருத்துவனையில் சோ்த்து "இனிமா" கொடுத்து கடந்த 2 நாட்களாக மருத்துவக்குழுவினா், தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 161 தங்க மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். அவைகளின் எடை 4.15 கிலோ. மதிப்பு ரூ.2.17 கோடி. இதையடுத்து 8 பேருக்கும் மீண்டும் மருத்துவ சிகிச்சை அளித்து சென்னை விமானநிலையத்திற்கு அழைத்து வந்தனா்.
 
அதன்பின்பு 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவா்கள் சா்வதேச தங்கம் கடத்துபவா்களிடம் கூலிக்காக கடத்தலில் ஈடுபடும் குருவிகள் என்று தெரியவந்தது. மேலும் இவா்களை இவ்வாறு கடத்தலில் ஈடுப்படுத்திய சா்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சோ்ந்தவா்கள் யாா்? என்று விசாரணை நடத்துகின்றனா்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்