சராசரி இருப்புத் தொகை: எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு

திங்கள், 25 செப்டம்பர் 2017 (23:30 IST)
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகளில் பராமரிக்கப்பட வேண்டிய  மாதாந்திர சராசரி இருப்புத் தொகை குறித்து அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. இந்த நிலையில் தற்போது அந்த நிலையில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளது.



 
 
இதன்படி எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருபதாவது:
 
மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பராமரிப்பைப் பொறுத்தவரையில், மாநகரங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பராமரிக்கப்பட வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.3,000-ஆக நிர்ணயிக்கப்படுகிறது. 
 
மாநகர்ப் பகுதி வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சமாக ரூ.5,000 மாதாந்திர சராசரி இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகை தற்போது ரூ.3000ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (Basic Savings Bank Deposit Accounts), பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது
 
அதேபோல் மாதாந்திர சராசரி இருப்புத்தொகையை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராமங்கள் மற்றும் பேரூர்களில் இந்த அபராதத் தொகை ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் இந்த தொகை ரூ.30 முதல் ரூ.50-ஆகவும் இருக்கும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்