3000 கோடி ரூபாய்.. உலகிலேயே மிகப்பெரிய சிலை: கெத்து காட்டும் பிரதமர் மோடி

புதன், 31 அக்டோபர் 2018 (12:55 IST)
உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
 
"இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பிறந்தவர் ஆவார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் போன்ற மிகப்பெரிய பொறுப்புகளை வகித்த இவர், சுதந்திரம்  பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
 
இதனால், அவருக்கு குஜராத்தில் சிலை வைக்க பிரதமர் மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
 
பிறகு அந்த சிலைக்கு  'ஒற்றுமைக்கான சிலை' என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 
 
சுமார் 250 என்ஜினியர்கள், 4000 வேலையாட்கள் இந்த சிலையை செய்துள்ளனர். பத்மபூஷன் விருது வாங்கிய ராம் வி சுதர் என்பவர் இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார். 2,989 கோடி ரூபாய் செலவில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. 
 
உலகிலேயே சீனாவில் இருக்கும் புத்த சிலை தான் பெரியது என கூறப்பட்டு வந்த நிலையில் அந்த ரெக்கார்டை தற்பொழுது சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை முந்தியுள்ளது. 
 
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்