இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவும் சலுகை: அரசு அறிவிப்பு

திங்கள், 6 ஏப்ரல் 2020 (07:45 IST)
இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவும் சலுகை
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வருவதையடுத்து கோடிக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பாடு மிகவும் திண்டாட்டமாக உள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது
 
இந்த நிலையில் பொதுமக்கள் வேலையின்றி, வருமானமின்றி இருப்பதை கணக்கில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சில சலுகைகளை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாத வீட்டு வாடகையை யாரும் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ள அரசு, அனைத்து கிரெடிட் கார்டு தவணைகள் கட்டவும் சலுகை வழங்கியுள்ளடு. இதுபோன்ற பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அது மட்டுமின்றி தமிழகத்தில் 1000 ரூபாய் பணமும் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் இதை வைத்து சிலகாலம் ஏழை எளிய மக்கள் சமாளிப்பார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சலுகையாக மார்ச் மாதம் இன்சூரன்ஸ் தவணை கட்ட வேண்டியவர்களுக்கு மேலும் ஒரு மாதம் சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே எல்ஐசி உள்பட அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஒரு மாத காலம் கிரேஸ் பீரியட் என்ற சலுகை வழங்குவது உண்டு. இதனை அடுத்து மேலும் ஒரு மாதம் வட்டியில்லாமல் பிரிமியம் தவணை கட்டிக்கொள்ள சலுகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மார்ச் மாதம் கட்ட வேண்டிய தவணையை மே மாதம் கட்டினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் கட்ட வேண்டியவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்