சர்தார் வல்லபாய் படேல் சிலை பிரதமர் மோடி திறக்க கூடாது - பழங்குடியினர் கடும் எதிர்ப்பு!

திங்கள், 22 அக்டோபர் 2018 (12:35 IST)
குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க அப்பகுதி பழங்குடியினர் கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் மோடி சிலையை திறந்தால் அன்றைய பொழுதில் தங்கள் வீடுகளில் சமைக்கப்போவதில்லை என அவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் போன்ற மிகப்பெரிய பொறுப்புகளை வகித்த இவர், சுதந்திரம்  பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
 
இதனால், அவருக்கு குஜராத்தில் சிலை வைக்க பிரதமர் மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
 
பிறகு அந்த சிலைக்கு  'ஒருமைப்பாட்டு சிலை' என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி சிலையைத் திறக்க முடிவு செய்தனர். 
 
ஆனால்,  பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்க அப்பகுதி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக கூறிய மோடி அரசு இதுவரை எங்களுக்கு எந்தவொரு சமூகநலத்திட்டமும் செய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
அதனால் எங்களின் எதிர்ப்பை மீறி மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்க தினமாக கடைபிடிப்போம் என்று நர்மதை ஆற்றங்கரையோரங்களில் உள்ள 72 ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்