காதலன் படுகொலை: காதலியின் பெற்றோர் வெறிச்செயல்

புதன், 10 அக்டோபர் 2018 (15:07 IST)
தெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக தெலுங்கானாவில் ஆணவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சாதி மாற்றுத் திருமணத்தால் பிரனய் குமார் என்ற வாலிபரை அவரது காதல் மனைவி அம்ருதாவின் தந்தை கூலிப் படையை ஏவி கொடூரமாக கொலை செய்தார். இது நாடெங்கும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. அதை தொடர்ந்து இதே போல் வேறு ஒரு சம்பவமும் அரங்கேறியது,
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் (23) என்ற வாலிபரும் 17 வயது பெண்ணும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து ஓடிப்போன அந்த பெண்ணிற்கு போன் செய்த பெற்றோர், உனக்கு அந்த பையனையே திருமணம் முடித்து வைக்கிறேன், இருவரும் வீட்டிற்கு வாருங்கள் என கூறியுள்ளனர்.
 
இதனை நம்பிய காதல் ஜோடி, வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணின் பெற்றோர் குமாரை படுகொலை செய்துவிட்டு பிணத்தை தேசிய நெடுஞ்சாலையில் வீசியுள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பெண்ணின் பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்