4 மாநில தேர்தல் முடிவுகள் கற்றுத்தரும் பாடங்கள் என்னென்ன? இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும்..!

ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (17:54 IST)
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநில வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் இதில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து அரசியல் கட்சிகள் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. பாஜகவின் தேர்தல் களம் நாடு முழுவதும் வலுவாக உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. பாஜகவை வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் மட்டும் போதாது என்றும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பது இந்த தேர்தல் முடிவுகள் இருந்து எதிர்க்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி தன்னை நாடு முழுவதும் உள்ள ஒரு தேசிய கட்சியாக கருதாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிக்கும் முக்கியத்துவம் தந்து, அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பது இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அதேபோல் மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில்  எதிர்நீச்சல் போட முடியவில்லை என்பதால் இளைஞர்கள் கையில் கட்சியை ஒப்படைக்க வேண்டும். தெலுங்கானாவில் கூட ரேவந்த் ரெட்டி என்ற இளைஞர் தான் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு பின்னால் இருந்து மூத்தவர்கள் வழி நடத்த வேண்டும்.

அதேபோல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி, மாநில கட்சிகளுடன் இணக்கத்துடன் இருந்து தொகுதிகள் பங்கீடு செய்வதில் சமரசம் செய்ய வேண்டும். இவை எல்லாம் இல்லாவிட்டால் கண்டிப்பாக மோடி ஹாட்ரிக் அடிப்பதை 2024 ஆம் ஆண்டில் தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்