ஒரு எம்.எல்.ஏவின் விலை ரூ.15 கோடி; குதிரை பேரம் அமோகம்! – அசோக கெலாட் குற்றச்சாட்டு!

வெள்ளி, 31 ஜூலை 2020 (08:34 IST)
ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் எம்.எல்.ஏக்களை வாங்கும் வேலையை ஒரு கட்சி தொடங்கிவிட்டதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் ஏற்பட்ட முரண்பாட்டால் பரபரப்பு எழுந்தது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில் சச்சின் பைலர் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் ஆகஸ்டு 14 அன்று ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட உள்ளார். அதற்குள்ளாக சில எம்.எல்.ஏக்களை வாங்கி பெரும்பான்மையை முறியடிக்க ஒரு தேசிய கட்சி திட்டமிட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “சட்டசபை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்ட உடனே எம்.எல்.ஏக்கள் மீதான குதிரை வர்க்க பேரத்தையும் சிலர் தொடங்கியுள்ளனர். முன்னதாக 10 முதல் 15 கோடி வரை விலை நிர்ணயித்து குதிரை பேரம் செய்து வந்தவர்கள், தற்போது வரம்பற்ற விலைகளை கொடுக்க தயாராக உள்ளனர். யார் இதை செய்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்” என அசோக் கெலாட் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்