அணையை உடைத்த நண்டுகளை கைது செய்யுங்கள்: போலீசில் காங்கிரஸ் புகார்

ஞாயிறு, 7 ஜூலை 2019 (17:58 IST)
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக திவாரே என்ற அணை உடைந்தது. இந்த அணை கட்டப்பட்டு 14 ஆண்டுகளே ஆன நிலையில் திடீரென உடைந்து பொதுமக்களுக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களுக்கும் கடும் சேதங்களை உண்டாக்கியது
 
இந்த நிலையில் திவாரே அணை உடைந்தது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த் திவாரே அணையில் அதிக எண்ணிக்கையில் நண்டுகள் இருந்ததாகவும், இந்த நண்டுகளே அணை உடைய காரணம் என்றும் கூறினார்.
 
பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் சிவசேனா எம்.எல்.ஏ. சதானந்த் சவானுக்கு சொந்தமான 'கெம்டெக்' என்ற நிறுவனம் தான் இந்த அணையை கட்டியதால் அந்நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபக்கம் வலியுறுத்தி வந்த நிலையில் இன்னொரு பக்கம் அணை உடைய நண்டுகளே காரணம் என அமைச்சர் கூறியது பொதுமக்களை கடும் ஆத்திரமடைய செய்தது
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் போலீசில் வித்தியாசமான புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் அமைச்சர் கூறியபடி அணை உடைய நண்டுகளே காரணம் என்றால் அந்த நண்டுகளை கைது செய்து அரசியலமைப்பு சட்டத்தின்படி நண்டுகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொண்டுங்கள் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்