சொத்துப் பிரச்சனையில் தந்தையின் கண்விழியை தோண்டி எடுத்த மகன்

புதன், 29 ஆகஸ்ட் 2018 (10:18 IST)
பெங்களூருவில் சொத்துப் பிரச்சனை காரணமாக பெத்த தந்தையின் கண்களை மகனே தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சகாம்பரி நகரை சேர்ந்தவர் பரமேஸ். இவரது மனைவி வசந்தி. பரமேஸ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கு சந்தன், சேத்தன் என்று 2 மகன்கள் உள்ளனர். சந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூழலில் சேத்தன் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். சமீபத்தில் வசந்தி உடல்நலக் குறைவால் காலமானார். 
இந்நிலையில் சொத்துக்களை தன் பேரில் எழுதி வைக்கும்படி, சேத்தன் தனது தந்தையிடம் வற்புறுத்தி வந்துள்ளார். நேரம் வரும் போது சொத்துக்களை மாற்றித் தருவதாகவும் தற்பொழுது உன் பெயரில் சொத்துக்களை மாற்றித் தர முடியாது என பரமேஸ் கூறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சேத்தன், தனது தந்தை என்றும் பாராமல் அவரின் கண்களை விரலால் தோண்டியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் பரமேஸ் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பரமேசை மீட்டு அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே போலீஸார் சேத்தனை கைது செய்தனர். சொத்திற்காக மகன் தந்தையின் கண்ணையே தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்