18 மாத சம்பள பாக்கி.. இட்லி விற்க போனாரா இஸ்ரோ இஞ்சினியர்? – உண்மை என்ன?

புதன், 20 செப்டம்பர் 2023 (09:07 IST)
18 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் சந்திரயான் 3 ஏவுதளம் அமைத்த பொறியாளர் இட்லி விற்பதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது உண்மையா என பார்ப்போம்.



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) சமீப காலத்தில் மங்கள்யான், சந்திரயான் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டது. உலகம் முழுவதும் இஸ்ரோவின் புகழ் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்காக ஏவுதளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொறியாளர் ஒருவர் சம்பள பாக்கியால் இட்லி விற்பனை செய்து வருவதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.



அந்த புகைப்படத்தில் உள்ளவர் பெயர் தீபக் குமார். இவர் HEC என்னும் Heavy Engineering Corporation Limited என்னும் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 18 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் பகுதி நேரமாக இட்லி விற்பனை செய்து வருகிறார். இந்த HEC நிறுவனம்தான் சந்திரயான் 3 திட்டத்திற்கான ஏவுதளத்தை அமைத்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனால் நாடே சந்திரயான் 3 -ஆல் பெருமை கொள்ளும் நேரத்தில் அதற்காக உழைத்தவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லையா? என்ற பேச்சு எழுந்துள்ளது.

PIB (Press Information Bureu) இந்த செய்தி குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. அதில் HEC நிறுவனம் சந்திரயான் 3 க்கான எந்த உபகரணங்களையும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்நிறுவனம் இஸ்ரோவுக்காக 2003 முதல் 2010ம் ஆண்டிற்குள் மட்டுமே தளவாடங்கள் செய்து அளித்ததாகவும் கூறியுள்ளது. இஸ்ரோ சாராத ஒரு நபரை காட்டி போலி செய்தி பரவி வருவதாக பிஐபி உறுதி செய்துள்ளது.


Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்