வாக்களிக்கவில்லை என்றால் ரூ.1000 நிறுத்தப்படும்..! திமுகவினர் மிரட்டல்..! சீமான் புகார்..!!

Senthil Velan

புதன், 17 ஏப்ரல் 2024 (16:58 IST)
திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரும் ரூபாய் நின்றுவிடும் என்று பொதுமக்களை திமுகவினர் மிரட்டி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மருத்துவர் வெ.ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 2024 தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது, அதிமுக இருக்காது என்று கூறுகிறார். அப்போது திமுக மட்டும் இருக்கும். அது ஏன் இருக்கிறது. அதுதான் கள்ளக் கூட்டணி என்று விமர்சித்தார்.
 
பசி, பஞ்சம், ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம், வேலையின்மை என்ற சொல் இல்லாத, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, இதெல்லாம் இல்லாத தேசமே தூய்மை இந்தியா என்றும் குப்பைகளைக் கொட்டி அள்ளுவது அல்ல என்றும் பிளாஸ்டிக்கை தடை செய்யாமல் தூய்மை இந்தியா கூறிவருவது மோசடி என்றும் சீமான் தெரிவித்தார்.
 
இந்தியா தூய்மையாகிவிட்டதா? பள்ளிக்கரனையை சென்று பாருங்கள், இயற்கையின் அருபெரும் கொடையை குப்பை மேடாக்கியவர்கள்தான் இந்த திமுகவும் அதிமுகவும் என்று அவர் கடுமையாக விமர்சித்தார். பள்ளிக்கரனை ஏரியை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு, திமுக அதிமுகவுக்கு வாக்களிப்பதா என்பதை முடிவு செய்யுங்கள் என்று சீமான் கூறினார். 

ALSO READ: தேசிய கட்சிகளையும், திமுகவையும் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்..! இபிஎஸ்..!

இப்போது திமுகவினர் மகளிரை எப்படி மிரட்டுகின்றனர் தெரியுமா? திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நின்றுவிடும் என்று கூறுகின்றனர் என்றும் அப்படி மிரட்டிவிட்டு அவர்கள் கையில் 300 ரூபாயைக் கொடுத்துவிட்டு செல்கின்றனர் என்றும் சீமான் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்