பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

vinoth

சனி, 18 மே 2024 (16:10 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆனால் இதனால் பவுலர்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச அழைக்கப்படுவதும் குறைந்துள்ளது. இந்த விதிகுறித்து ரோஹித் ஷர்மா மற்றும் முகமது சிராஜ், அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலியும் இப்போது இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “இது குறித்த ரோஹித் ஷர்மாவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இதனால் ஆல்ரவுண்டர்களுக்கு போதுமான வாய்ப்புக் கிடைக்கவில்லை. பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் வீசும்போது பவுண்டரி செல்லுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். சர்வதேச தரத்திலான ஒரு தொடரில் இதுபோல ஒருதலை பட்சமான விதி இருக்கக் கூடாது. இந்த விதி கிரிக்கெட்டின் சமநிலையை உடைப்பதாக உள்ளது. இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என சொல்லியுள்ளார்கள். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விதி எனக்குப் பிடித்திருந்தாலும், குறைந்த ஸ்கோர்கள் உள்ள போட்டிகளில் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்