“என் வழி கோலி, தோனி வழிதான்”… ஆட்டநாயகன் ஜோஸ் பட்லர் மகிழ்ச்சி!

vinoth

புதன், 17 ஏப்ரல் 2024 (09:54 IST)
ஐபிஎல் 2024 சீசனின் 31 ஆவது போட்டி நேற்று  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். அவருக்கு துணையாக அங்கிஷ் ரகுவன்ஷி 30 ரன்களும், ரிங்கு சிங் 20 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் கே கே ஆர் அணி 223 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தது. ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகி வெளியேறிவிட மறுமுனையில் பவுலர்களை வைத்துக் கொண்டே பட்லர் அதிரடியில் இறங்கினார். 36பந்துகளில் அரைசதம் அடித்த பட்லர், 54 பந்துகளில் சதமடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை வென்ற ஜோஸ் பட்லர் பேசும்போது “நான் மோசமான ஃபார்மில் இருந்தபோது எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையைக் கைவிடக் கூடாது என நினைத்தேன். பயிற்சியாளர் சங்கக்கரா என்னிடம் களத்தில் நீண்ட நேரம் இருந்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்றார். ஒரே ஒரு ஷாட் கூட உங்களை மீண்டும் ஃபார்முக்கு கொண்டுவந்துவிடும். தோனி, கோலி போன்றவர்கள் நீண்ட நேரம் களத்தில் நின்று போட்டிகளை வெல்வதை நான் கவனித்திருக்கிறேன். இன்று என்னுடைய இன்னிங்ஸ் அதை போன்ற ஒன்றுதான். ஐபிஎல் தொடரில் இதுதான் எனது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். கடைசிவரை இருந்து வெற்றி பெறவைத்தது மனநிறைவை தருகிறது” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்