ஓய்வில் இருந்தது ஐபிஎல் விளையாட இல்ல.. என் ப்ளானே வேற..! – ஹர்திக் பாண்ட்யா ஓபன் டாக்!

Prasanth Karthick

வியாழன், 21 மார்ச் 2024 (09:56 IST)
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் போட்டிக்காக விளையாட உள்ள ஹர்திக் பாண்ட்யா தான் இத்தனை நாள் ஓய்வில் இருந்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.



ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சிஎஸ்கேவா? ஆர்சிபியா? என ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் மற்ற ரசிகர்களுடன் இணையவழி மோதலை தொடர்ந்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இத்தனை சீசன்களாக கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக மும்பை அணி நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து ரோஹித் சர்மாவும், ஹர்திக் பாண்ட்யாவும் தோழமை காத்து வருகின்றனர். ரசிகர்களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா ரசிகர்கள் பலர், ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவே கடந்த உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள ஹர்திக் பாண்ட்யா “நான் இவ்வளவு நாள் ஓய்வில் இருந்ததற்கு காரணம் ஐபிஎல் இல்லை. ஐபிஎல் அதில் ஒரு பகுதிதான். ஐபிஎல்க்கு பிறகு பெரிய குழந்தையான உலகக்கோப்பை டி20 கோப்பையை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. நான் உலகக்கோப்பைகளை என் குழந்தைகளாக பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே உள்மோதல் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்