‘நாங்கள் இன்னும் ஒழுக்கமாக விளையாட வேண்டும்’… ஹாட்ரிக் தோல்வி குறித்து மும்பை கேப்டன் பாண்ட்யா!

vinoth

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:23 IST)
இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்று தங்கள் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. மும்பை அணியில் அதிக பட்ச ஸ்கோராக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் முறையே 34 மற்றும் 32 ரன்களை சேர்த்தனர். ராஜஸ்தான் தரப்பில் டிரண்ட் போல்ட் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ஆவது ஓவரில் எளிதாக இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்த சீசனில் ஹாட்ரிக் தோல்வியைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா “கடுமையான இரவுதான். நாங்கள் நினைத்தது போல போட்டியைத் தொடங்க முடியவில்லை. நான் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்தேன். நாங்கள் 160 ரன்கள் சேர்க்கும் நிலையில் இருந்தோம். ஆனால் என் விக்கெட் அவர்களை மீண்டும் அட்டாக் செய்ய வழிவகுத்தது.

நான் இன்னும் நிறைய செய்ய வேண்டும். நாம் நினைத்தது சில நேரங்களில் நடக்காது. நாங்கள் ஒரு குழுவாக இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும்.  நாங்கள் இன்னும் ஒழுக்கமாகவும், தைரியமாகவும் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்