மாட்டுச்சாணத்தால் உருவான `சிப்` செல்ஃபோன் கதிர்வீச்சிலிருந்து நம்மை காக்குமா? #BBCRealityCheck

புதன், 14 அக்டோபர் 2020 (17:17 IST)
செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறி, மாட்டுச் சாணத்தால் ஆனசிப்ஒன்றை இந்திய அதிகாரி ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

"மொபைல் ஃபோன்களில் பொருத்திக் கொள்ளக்கூடிய இந்த சிப்பை பயன்படுத்தினால், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறையும்," என தேசிய பசு மாடுகள் ஆணையத்தின் தலைவர், மருத்துவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ள இந்த கூற்றுக்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டுச் சாண 'சிப்' என்றால் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கோசாலாவில் (பசுமாடுகள் தங்குமிடம்) இந்த "சிப்" உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் ஃபோனின் மேல் புறத்தில் இதனை ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படி ஒட்டினால், மொபைலில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை குறைத்து பாதுகாக்கும் என கூறப்படுகிறது.

இந்த சிப்பை 50ல் இருந்து 100 ரூபாய்க்கு வரை விற்று வருகிறார்கள். அதோடு, மேலும் 500க்கும் மேற்பட்ட கோசாலாக்களில் இந்த சிப் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக இதனை தயாரித்து வருவதாகவும், ஆனால், அறிவியல்பூர்வமான சோதனைகளை செய்ததில்லை என்றும் குஜராத்தில் உள்ள அந்த கோசாலா அமைப்பு பிபிசியிடம் தெரிவித்தது.

மாட்டுச் சாணம் மற்றும் பிற பொருட்களால் ஆன இந்த சிப்பில், கதிர்வீச்சுகளை குறைப்பதற்கான திறன் உள்ளதாக ஆயுர்வேத இலக்கியம் கூறுவதாக கோசாலாவை பராமரிக்கும் தாஸ் பய் கூறுகிறார்.

"ஆனால் நாங்கள் எந்த பரிசோதனைகளையும் நடத்தவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

மாட்டுச் சாணத்தில் கதிர்வீச்சை குறைக்கும் திறன் உள்ளதா?

இல்லை. ஆனால், இவ்வாறான கூற்று முன்வைக்கப்படுவது இது முதல்முறையல்ல.

2016ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்-இன் துணை அமைப்பு ஒன்றின் தலைவர் சங்கர் லால், மாட்டுச் சாணம் ஆல்ஃபா, பீடா மற்றும் காமா என மூன்று விதமான கதிர் வீச்சுகளையும் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

ஆனால், இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என, ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

மாட்டுச் சாணத்தில் இதுபோன்ற எந்த திறனும் இல்லை என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளராக இருக்கும் கௌதம் மேனன்.

பெரும்பாலும் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க கவச பொருளாக உதவுவது ஈயம்தான்.
ஆனால், மாட்டுச்சாணத்துக்கு அப்படி ஒரு எந்த திறனும் இல்லை. ஆயிரக்கணக்கான இந்திய வீடுகளில் வாசல் சுவர்களில் இன்றும் மாட்டுச் சாணத்தை தட்டி வைக்கும் பழக்கம் உண்டு.

அதிக அளவில் கிடைக்கும் மாட்டுச் சாணம், கிராமப்புறங்களில் ஒரு முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது, ஆனால், அதற்கும் கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்கிறார் பேராசிரியர் மேனன்.

மொபைல் போன்களில் இருந்து தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சு வருகிறதா?

கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன்களால் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவுகள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. செல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற மற்ற ஆபத்தான உடல்நலக்குறைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வெளியிட்ட சமீபத்திய பரிந்துரைகளில், மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் என்று ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

"செல்போன்களை பயன்படுத்தும்போது, அவை மின்திறன் இல்லாத மரபணு கதிர்வீச்சுகளையே குறைந்த அளவில் வெளிப்படுத்துகிறது. இதனால், ஒரு மனிதரின் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்கிறார் பிரிட்டனின் மருத்துவ இயற்பியல் துறை வல்லுநரான பேராசிரியர் மால்காம் ஸ்பெரின்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்