அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல்

Sinoj

செவ்வாய், 26 மார்ச் 2024 (23:00 IST)
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்தது.
 
ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் விழுவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.
 
மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர்.
 
போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றி வருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.
 
கப்பல் மோதிய போது பாலத்தில் சென்ற வாகனங்கள் என்ன ஆயின? அந்த நேரத்தில் பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் கதி என்ன? மோதல் நிகழ்ந்த போது கப்பல் எப்படி இருந்தது? கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் என்ன கூறுகிறது? என்பது குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
 
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது
 
கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை
கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது
 
சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.
 
"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.
 
கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.
 
இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.
 
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.
 
இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.
 
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.
 
"பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்று அவர் கூறினார்.
 
"பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
 
மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
 
பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
 
கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.
 
"பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
 
கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
 
பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், "கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்" எனத் தெரிவித்தார்.
 
கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
 
மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார்.
 
பால்டிமோர் தீயணைப்புத் தலைவர் கூறுகையில், "எங்கள் சோனார் கருவி தண்ணீரில் வாகனங்கள் மூழ்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்", ஆனால் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.
 
பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருப்பதாக அவர் கூறுகிறார். "நாங்கள் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.
 
சில தொழிலாளர்கள் இன்னும் பாலத்தில் இருப்பதாக அவரது குழுவிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 
பாலத்தில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள்?
அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து மேரிலாந்தின் போக்குவரத்துச் செயலர் பால் வைடெஃபெல்ட்டும் செய்தியாளர்களுக்கு தகவல்களை வழங்கினார்.
 
பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அதில் பணிபுரிந்த ஒப்பந்ததாரர்கள், "கான்கிரீட் தளத்தில் சில பழுது நீக்கும் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்" என்று வைடெஃபெல்ட் கூறினார்.
 
தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்வதால் பால்டிமோர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தண்ணீரில் உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைத் தேடுவதே முதன்மை பணி. சம்பவ இடத்தில் மூன்று சிறிய படகுகள், 87 அடி ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன." என்றார்.
 
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைடெஃபெல்ட் கூறினார். பாலம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார்.
 
 
அரசாங்க நிறுவனமான சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA )யின் வகைப்படுத்தப்படாத மெமோ, சிங்கப்பூர் கொடியுடன் இருந்த டாலி கப்பல் "உந்து சக்தியை இழந்து" அதன் பின்னரே "பாலத்தின் துணைக் கோபுரத்தில்" மோதியதை உறுதிப்படுத்தியுள்ளது.
 
கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சிங்கப்பூர் கொடி தாங்கிய சரக்கு கப்பல் டாலி, மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இரண்டு மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்களில் ஒன்றின் மீது மோதியது.
 
மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
 
 
இதேபோல் சினெர்ஜி மரைன் குழுமத்தின் செய்தி அதிகாரி பகிர்ந்துள்ள தகவலில், "மோதல் காரணமாக பணியாளர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் குழுவினரிடம் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 22 பணியாளர்களில் 16 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடிந்தது.
 
விபத்து குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் குழுவினருடன் பேச முடியாத நிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்