உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வேகம் குறைந்தது!

சனி, 20 மார்ச் 2021 (07:40 IST)
உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் செல்பேசி செயலிகள் மூலம் பதிவிறக்கப்பட்ட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவைகள் மூலம் பயனர்களால் தகவல்கள் பரிமாற்றத்தை மேற்கொள்ளவோ தகவல்களை பெறவோ இயலவில்லை. இரவு 11.38 மணிக்கு பிறகு வாட்ஸ் சேவை இயங்கத் தொடங்கின.
 
முன்னதாக, இதுபோன்ற சமூக ஊடக சேவைகளின் செயல்பாடு மற்றும் வேகத்தை கண்காணிக்கும் தனியார் இணையதளமான டவுன்டிடெக்டர், சேவை முடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாக சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பெற முடியவில்லை என்று முறையிட்டதாக கூறப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் இது 30 ஆயிரத்தைக் கடந்தும், ஃபேஸ்புக்கில் இது 50 ஆயிரத்தை கடந்தும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மூன்று முக்கிய செயலிகளும் ஏன், எதற்காக திடீரென என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. வாட்ஸ்அப் நிறுவனமோ, பிற சமூக ஊடக நிறுவனமோ இந்த செய்தி பதிவேற்றப்படும் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதே சமயம், இரவு 11.40 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப் செயலியில் பயனர்களால் தகவல் பரிமாற்றம் செய்ய முடிந்ததாக அறிய முடிகிறது.
 
இதேவேளை ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோர் பலரும், வாட்ஸ்அப் செயலி, இன்ஸ்டாகிராம் செயலி, ஃபேஸ்புக் சேவை முடங்கியதை பரவலாக விமர்சித்தும் அந்த தகவலை பகிர்ந்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். #whatsappdown என்ற பெயரில் ஹேஷ்டேக்கை பதிவிட்டு ட்விட்டர் பயனர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்