"சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை" - முதல்வர் பழனிசாமி

செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:00 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று (ஜனவரி 19) டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைத் திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதியளிக்குமாறும், சில திட்டங்களுக்கான நிதியை வழங்குமாறும் கோரிக்கை வைத்ததாக தமிழக முதல்வர் பழனிசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

அரசியல் குறித்தோ அல்லது அரசியல் ரீதியாகவோ எதையும் பிரதமரிடம் பேசவில்லை என்றார் முதல்வர்.

சிறையிலிருந்து வெளிவர இருக்கும் சசிகலா அ.தி.மு.க உடன் இணைய வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்விக்கு "100% வாய்ப்பே இல்லை" என்று மறுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அதோடு சசிகலா அ.தி.மு.க கட்சியிலேயே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"காவிரி குண்டாறு இணைப்புத் திண்ட்டம், கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்" என்றார் முதல்வர் பழனிசாமி.

"சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தது. அதே போல
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய்த் திட்டமும் நிறைவடைந்துவிட்டது. அதைத் துவக்கி வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்."

"கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் நடந்தாய் வாழி காவிரி திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

"சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கம் மட்டுமின்றி நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்பு, ஜனவரி மாதத்தில் பொழிந்த மழை போன்றவையால் விவசாயம் மற்றும் விவசாயப் பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு நிவாரணம் வழங்க நிதி உதவி கேட்டிருப்பதாகவும் கோரிக்கை வைத்திருக்கிறேன்."

கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்தவும், திருவள்ளூரில் உள்ள மணலூரில் மருந்துகள் பூங்கா தொடங்கவும், காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்கும் தமிழக அரசு திட்டத்துக்கு நிதி உதவி அளிக்குமாறும் கோரிக்கை வைத்திருப்பதாக முதல்வர் கூறினார்.

அதோடு இரு மிகப் பெரிய ஜவுளிப் பூங்காக்களை தமிழகத்தில் அமைக்கவும், தமிழகத்தில் மத்திய அரசு ராணுவ தளவாட தொழிற்சாலைகளை சென்னை, சேலம், ஒசூர், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அமைப்பதாக அறிவிக்கப்பட்டதை விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை சிறையிலிருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறையில் இருக்கும் இன்னும் சில மீனவர்களை விடுவிக்கவும், தமிழக மீனவர்களின் படகுகள், இலங்கை அரசால் பறிமுதல் செய்து பிடித்து வைக்கப்பட்டிருப்பதை விடுவிக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்