புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: ‘15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், 9 ஜூன் 2020 (11:47 IST)
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, 15 நாட்களுக்குள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இலவச வேலைவாய்ப்பு மையங்களை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க கூடாது: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘’பொறுமை இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றனர்’’ - மத்திய அமைச்சர்
நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய உத்தரவில், கொரோனா ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெறுவது குறித்து உரிய அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் தவறிவிட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயலும் முயற்சிகளின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது, உணவு, உறைவிடம் ஆகியவை இல்லாமல் தவிப்பது போன்றவை குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இது மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சி மற்றும் சில சமூக செயல்பாட்டாளர்கள் தரப்பிலும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக சில இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், காலின் கொன்செல்வ்ஸ், சஞ்சய் பாரிக் உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் வாதிட்டனர்.


இடைக்கால உத்தரவு

வாதங்கள் நிறைவடைந்த பின்பு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் ரயில்வே கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பயணம் தொடங்கும் பொழுது எந்த மாநிலத்தில் பயணம் தொடங்குகிறதோ அந்த மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். ரயில் பயணத்திபோது இந்திய ரயில்வே அவற்றை வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்னர் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அந்த இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த வாரத்தில் இந்தியாவில் சாலைகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றால், நெடுஞ்சாலைத்துறையின் உதவியுடன் அவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்