பைடன் நிர்வாகத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு: கருக்கலைப்பு குறித்த கேள்வி

வியாழன், 21 ஜனவரி 2021 (12:42 IST)
அமெரிக்க அதிபராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தில், வெள்ளை மாளிகையில் நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட  முதல் கேள்வி என்ன தெரியுமா? யார் அதை நடத்தியது தெரியுமா?

புதிய நிர்வாகத்தின் ஊடகச் செயலராக ஜென் சாகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் இந்த முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். சுமார் 50 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
 
"அமெரிக்க மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான் பைடன் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்" என்றார் ஜென் சாகி.
 
"என்னை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் பைடன் என்னிடம் கேட்ட போது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உண்மையையும்,  வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவது எவ்வளவு முக்கியமானது என விவாதித்தோம்" என்றார் ஜென் சாகி.
 
அவர் பேசி முடித்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கான கேள்வி நேரம் தொடங்கியது.
 
'துல்லியமான உண்மைகளை கொண்டு செல்லும் கடமை'
 
நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? அதிபர் ஜோ பைடன் மதிப்பை உயர்த்துவதற்கா? அல்லது வெளிப்படையாக உண்மையை பகிர்வதற்கா? என  அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை சார்பில் முதல் கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த ஜென் சாகி,
 
"சுதந்திரமான பத்திரிகைகளின் பங்களிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நாம் இருவரும் முரண்படும் நேரங்கள் வரலாம், ஆனால் நம் இருதரப்புக்கும், அமெரிக்க மக்களிடம் துல்லியமான உண்மையைக் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஒரு பொது நோக்கம் இருக்கிறது" என்றார்?
 
அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், உண்மையையும் கொண்டு வர தானும் அதிபர் பைடனுடன் பணியாற்றப்போவதாக குறிப்பிட்டார் ஜென்.
 
பொதுவாக அமெரிக்க ஊடக செயலர்கள், பத்திரிகையாளர்களுடன் நல்லுறவில் இருந்ததில்லை.
 
"டிரம்பின் பதவியேற்புக்குதான் வரலாறு காணாத அளவில் அதிக அளவில் பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்" என டிரம்ப் ஆட்சியின் முதல் வெள்ளை  மாளிகை செய்தித் தொடர்பாளர் சியன் ஸ்பைசர் கூறி சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.
 
கருக்கலைப்பு குறித்த கேள்விக்கு மழுப்பிய ஊடக செயலர்
 
மெக்ஸிகோ நகர கொள்கை மற்றும் ஹைட் சட்டத் திருத்தம் ஆகிய கருக்கலைப்பு நிதி ஆதரவு குறித்த இரு முக்கிய சட்டங்களைப் பற்றிக் கேள்வி எழுப்பினார் ஒரு பத்திரிகையாளர்.
 
கருக்கலைப்புக்கு அமெரிக்க மத்திய அரசின் நிதியை வழங்காமல் தடுக்கும் சட்டம் தான் இந்த ஹைட் சட்டத்திருத்தம்.
 
இந்த சட்டத் திருத்தத்தை பைடன், முன்பு ஆதரித்து வந்தார். இந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தன் நிலையை மாற்றிக் கொண்டார். அனைத்து மருத்துவம் சார்ந்த விஷயங்களும் ஒருவரின் உரிமை என்று தான் நம்புவதாகக் கூறினார் பைடன்.
 
இது குறித்து கேள்வி எழுப்பிய போது "அதிபர் பைடன் தேவாலயத்துக்கு தொடர்ந்து செல்லும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர். இதற்கு மேல் இது குறித்துக் கூற என்னிடம் எதுவும் இல்லை" என்றார் ஜென்.
 
ஒற்றுமை என்கிறீர்களே, டிரம்ப் கண்டன தீர்மானம் என்ன ஆகும்?
 
ஜோ பைடன் ஒற்றுமை எனக் கூறுவது உண்மை என்றால், முந்தைய அதிபர் டிரம்பின் மீது நிறைவேற்றப்பட்டிருக்கும் கண்டனத் தீர்மானத்தை கைவிட்டிருக்க வேண்டுமே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
 
"அமெரிக்க மக்களைப் போலவே, அமெரிக்க செனட் சபையும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும். செனட் அமெரிக்க மக்கள் தொடர்பான பணிகளைச் செய்யும் அதே நேரத்தில், தன்னுடைய அரசியலமைப்புப் பணிகளையும் செய்யும்" எனக் கூறினார் ஜென் சாகி.
 
அமெரிக்காவை ஒன்றிணைக்க வேண்டுமென்றால், அமெரிக்கா எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் பைடனின் பார்வை. அதிபர்  பைடனின் கவனம் அரசியலில் இல்லை, அமெரிக்க மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், வேலையில் இறங்குவதிலும் தான் அவர் கவனம் இருக்கிறது எனக்  குறிப்பிட்டார் அவர்.
 
ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன், பிரதிநிதிகள் அவை, டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டது. இன்னும் செனட் அவை தன்  விசாரணையைத் தொடங்கவில்லை.
 
ஒர் அமெரிக்க அதிபர், தன் பதவிக் காலத்துக்குப் பிறகும் கண்டனத் தீர்மானத்தை எதிர்கொள்வது, இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
 
புதிய நிர்வாகத்தின் ஊடகச் செயலராக ஜென் சாகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் இந்த முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். சுமார் 50 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
 
"அமெரிக்க மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான் பைடன் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்" என்றார் ஜென் சாகி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்