அக்கா மரணத்திற்கு 20 ஆண்டு காத்திருந்து பழிவாங்கிய தம்பி - கனடாவில் இருந்து தஞ்சை வந்து கொலை செய்தது எப்படி?

Sinoj

சனி, 13 ஜனவரி 2024 (21:04 IST)
கூட்டுறவு அங்காடியில் ஊழியராக வேலை பார்த்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாமரங்கோட்டையச் சேர்ந்த வேலாயுதம், 2014 ஆம் ஆண்டில் அன்று வழக்கம்போல வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.
 
ஆவ வேளாளர் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற அவரை, ஹெல்மெட் அணிந்து காரில் வந்து இறங்கிய நபர், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில், சம்பவ இடத்திலேயே வேலாயுதம் உயிரிழந்தார்.
 
கொலையை நேரில் பார்த்த வேலாயுதத்தின் மனைவி வைரவ மீனாட்சி, கொலை செய்த நபர் முகமூடி அணிந்து ஹெல்மெட் அணிந்திருந்ததால், அடையாளம் தெரியவில்லை என்றும், ஆனால், உள்ளூரில் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக அப்போதே கூறியிருந்தார். ஆனால், போலீசாருக்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில், கடந்த ஆண்டும் அதேபோல ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், வேலாயுதத்தின் மனைவி மீனாட்சியையும் அதே பாணியில் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், இச்சம்பவத்தில் கையில் பலத்த காயமடைந்த மீனாட்சி நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், இதே பாணியில் ஹெல்மட் அணிந்து முகமூடி அணிந்த வந்த இருவர், தாமரங்கோட்டை கட்ட வேளாளர் தெருவில் வசிக்கும் கார்த்திகாவையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், கார்த்திகா கழுத்தில் காயத்துடன் உயிர் தப்பினார்.
 
இந்த 3 நிகழ்வுகளிலும் ஒரே நபர் ஈடுபட்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 10 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த அந்த நபரை கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். பத்து ஆண்டுகளாக போலீசார் வலையில் சிக்காமல் தப்பிய அந்த நபர் யார்? வேலாயுதத்தை கொலை செய்ய காரணம் என்ன? மீனாட்சியையும், கார்த்திகாவையும் கொலை செய்ய திட்டமிட்டதற்கான காரணம் என்ன?
 
வேலாயுதம் கொலை செய்யப்பட்டதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
 
போலீசாரின் கூற்றுப்படி, 2014 ஆம் ஆண்டு, வேலாயுதத்தின் அண்ணன் பாலசுப்பிரமணியம் அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான கலைச்செல்வியைத் திருமணம் செய்தார். ஆனால், கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கலைச்செல்வி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
பின், இரண்டு மாதங்களுக்கு பிறகு, கணவன், மனைவிக்கும் இடையே சமாதானம் ஏற்பட, கலைச்செல்வி மீண்டும் தன் கணவன் பாலசுப்பிரமணியத்துடன் வாழ வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், சிறிது நாட்களிலேயே, கலைச்செல்வி தற்கொலை செய்து கொண்டார்.
 
கலைச்செல்வி இறந்தபோது, 22 வயதான அவரது தம்பி பாலசந்தர், சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். இவர்தான் வேலாயுதத்தை கொலை செய்தது மட்டுமின்றி, வேலாயுதத்தின் மனைவி மீனாட்சி மற்றும் அவரது மனைவி கிருத்திகாவையும் கொலை செய்ய முயன்றதாக போலீசார் கூறினர்.
 
வேலாயுதத்தின் கொலை வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், பாலசந்தர் தனது அக்கா கலைச்செல்வியின் தற்கொலைக்கு வேலாயுதம்தான் காரணம் என நினைத்து, பல ஆண்டுகளாக திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறினர்.
 
வழக்கு குறித்து பிபிசியிடம் பேசிய சிபிசிஐடி ஆய்வாளர் ரஹ்மத் நிஷா, “அவர் பல ஆண்டுகளாக உள்ளூரிலேயே இல்லை. கொலை சம்பவம் நடப்பதற்கு முன்னும், பின்னும் கூட அவர் கிராமத்திலேயே இல்லை, அதனால், தான் அவரை சந்திகிக்கவோ, அல்லது விசாரிக்கவோ கூட முடியாமல் இருந்தது,” என்றார்.
 
உள்ளூரிலேயே இல்லாத ஒருவர் எப்படி கொலையை செய்தார் எனக் கேட்டபோது, 2014 இல் கனடாவில் பணியாற்றி வந்த வேலாயுதம், இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கள்ளத்தோணியில் கடல்வழியாக ராமேஸ்வரம் வந்து, அங்கிருந்து காரில் பட்டுக்கோட்டை வந்து, வேலாயுதத்தை கொலை செய்துவிட்டு, அதே காரில் அதே வழியில் தப்பிச் சென்றதாக் கூறினார் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் ரஹ்மத் நிஷா.
 
கலைச்செல்வியின் தற்கொலைக்கு யார் காரணம் என்று தெரியவில்லை என்று கூறிய அதிராம்பட்டினம் காவல்துறை அதிகாரி ஒருவர், 20 ஆண்டுகளுக்கு மேல் பாலசந்தர் இந்தக் கொலைக்கு திட்டமிட்டதாகக் கூறினார்.
 
“பாலசந்தரின் அக்கா இறந்தபோது, அவர் சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். பின், 2004 ஆம் ஆண்டு ஊருக்கு வந்த பாலசந்தர் அப்போதும் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அப்போது அவருக்கு திருமணமானதால், அப்போதும் அவர் தவிர்த்துள்ளார்.
 
பின், நீண்ட நாட்களாக திட்டமிட்டு, தன் நண்பர்களின் துணையோடு, சம்பவத்தின் முன்னும் பின்னும் ஊருக்குள் தங்காமலேயே இந்த கொலையை செய்துள்ளார்,” என்றார் அதிராம்பட்டினம் காவல்துறை அதிகாரி.
 
வேலாயுதம் கொலை வழக்கை முதலில் தஞ்சாவூர் மாவட்ட அதிராம்பட்டினம் போலீசார் தான் விசாரித்து வந்துள்ளனர். ஆனால், கொலை குற்றவாளிகள் யாரையும் கைது செய்யாமல், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
 
இந்நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி, மீனாட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்த 2016 ஆம் ஆண்டு வேலாயுதம் கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதில் இருந்தே தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறினார் மீனாட்சி.
 
“நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டதில் இருந்தே எனக்கு சில அயல்நாட்டு எண்களில் இருந்து அழைப்பு வரும். அந்த அழைப்பு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு பதற்றம் ஏற்படும். அந்த அழைப்பில் மறுமுனையில் இருக்கும் நபர், வழக்கை திரும்பப் பெறக் கூறி மிரட்டுவார். இந்த மிரட்டல் வருடக்கணக்கில் தொடர்ந்தது,” என்றார் மீனாட்சி.
 
இச்சூழலில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி, மீனாட்சி அருகில் உள்ள சந்தைக்குச் சென்று தனது சைக்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த இருவர் அரிவாளால் வெட்டிள்ளனர். இதில், கழுத்தில் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார் மீனாட்சி.
 
“இந்த வழக்கில் மீனாட்சி தீவிரம் காட்டி வந்ததால், பாலசந்தர், கனடாவில் இருந்து தனது நண்பர்கள் மூலம் மீனாட்சியை கொலை செய்ய திட்டமிட்டு இதைச் செய்துள்ளார்,” என்றார் நிஷா.
 
ஆனால், மீனாட்சியை கொலை முயற்சி செய்த வழக்கை அதிராம்பட்டினம் போலீசார் தான் விசாரித்து வருகின்றனர்.
 
வேலாயுதத்தை கொலை செய்துவிட்டு 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாலசந்தருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவரையும் கொலை செய்ய முயன்றதாக அதிராம்பட்டினம் போலீசார் கூறினர்.
 
பாலசந்தர், அவரது மனைவி கார்த்திகாவை கொலை செய்வதற்காக கனடா பாஸ்போர்ட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 30 தேதி திருச்சி வந்து, அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு வந்ததாகக் கூறினார், சிபிசிஐடி உதவி ஆய்வாளர் மங்கய்.
 
“ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஹெல்மெட் அணிந்து, காரிலும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கொலையில் ஈடுபட்டுள்ளதால், இந்த முறை அதேபோல பட்டுக்கோட்டை நகர் பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து எங்களுக்கு தகவல் கிடைத்தது.
 
அதன் அடிப்படையில், நாங்கள் தேடிச் சென்றபோது, இருசக்கரத்தில் வந்த பாலசந்தரும், அவரது நண்பர் ஒருவரும் கார்த்திகாவை வெட்டிவிட்டு, தப்பிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை விரட்டிப் படித்தபோது தான், அது பாலசந்தர் என்பது தெரியவந்தது,” என்றார் அதிராம்பட்டினம் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி.
 
கைது செய்யப்பட்ட பாலசந்தரிடம் இருந்து, சிங்கப்பூர், கனடா மற்றும் இலங்கை நாட்டின் போலி பாஸ்போர்ட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவையை கைப்பற்றியுளள போலீசார், பாலசந்தரை சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்