காதல் தகராறு: சென்னையில் காதலன் கண் முன்பாக காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வியாழன், 10 ஜனவரி 2019 (16:06 IST)
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :


 
சென்னை வியாசர்பாடி காலனியை சேர்ந்தவர் முனுசாமி. என்பவருடைய மகள் காமேஸ்வரி, இந்த பெண் தன்னுடன் ஒன்றாக படித்த, அதே பகுதியைச் சேர்ந்த  சுந்தர் (19) என்பவரை காதலித்து வந்தாராம்.
 
பள்ளியில் தொடங்கிய இந்த காதல், காமேஸ்வரி கல்லூரிக்கு சென்ற பிறகும் தொடர்ந்தது. இதையறிந்த அவரது பெற்றோர், காமேஸ்வரியை கல்லூரி அனுப்பாமல் பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
 
ஆனாலும் இருவரும் காதலை தொடர்ந்து வந்தனர். இதை அறிந்த காமேஸ்வரியின் பெற்றோர் சுந்தரை கண்டித்தனர். நேற்று காதலர்கள் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் சென்னை கடற்கரைக்கு செல்வதற்காக வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து நின்றனர்.
 
அப்போது இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த காமேஸ்வரி, திடீரென அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் முன் பாய்ந்தார். இதில் காதலன் கண் எதிரேயே அவர் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்/
 
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், தற்கொலை செய்து கொண்ட காமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது காதலன் சுந்தரிடம் விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்