ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு படத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்நாள் ஷுட்டிங்கின் போது பிரகாஷ்ராஜுக்கும் படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளில் பரஸ்பரம் திட்டிக் கொண்டனர். இதனையடுத்து பிரகாஷ்ராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இணை இயக்குனர் சூர்யா இயக்குனர்கள் சங்கத்தில் பிரகாஷ்ராஜ் மீது புகார் செய்தார். இதையடுத்து ஒரு வருடம் தெலுங்கு சினிமாவில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு தடை விதிப்பது என இயக்குனர்கள் சங்கம் முடிவு செய்து, தங்களின் முடிவை நடிகர் சங்கத்துக்கும் அறிவித்தது.
இந்த விசாரணை குறித்து பேசிய பிரகாஷ்ராஜ், சூர்யாவை நான் திட்டவில்லை, எனக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். குறிப்பிட்ட ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த புகார் தரப்பட்டுள்ளது. ஓராண்டு தடைவிதிப்பது நியாயமில்லை. என்னை கல்லால் அடித்தாலும் அந்த கல்லை கொண்டு வீடு கட்டுவேன். சினிமாவில் இருந்து துரத்த நினைத்தால் மேலும் வளரவே செய்வேன் என்றார் ஆவேசமாக.