தவறான துவக்கம்: உசைன் போல்ட் தகுதியிழப்பு; யோஹன் பிளேக் தங்கம்

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (17:52 IST)
தென்கொரியாவின் டேகுவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டிகளின் ஆடவர் 100மீ ஓட்டத்தில் உலகின் அதிவேக மனிதனும் உலகச் சாதனையாளருமான உசைன் போல்ட் தவறாகத் துவங்கி ஓட்டத்திற்குத் தகுதி பெறாமல் போனார்.

இதனையடுத்து ஓட்டத்தில் பங்குபெற்ரு 9.92 வினாடிகளில் இலக்கை எட்டிய மற்றொரு ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

துப்பாக்கி குண்டு முழக்கத்திற்கு முன்னமேயே உசைன் போல்ட் ஓடத் துவங்கினார். ஆனால் அவருக்கே தன் தவறு தெரிந்தது. இதனால் தன் பனியனை இழுத்து முகத்தில் மூடிக் கொண்டார். தான் தகுதியிழந்து விட்டோம் என்பது அவருக்கே தெரிந்தது.

அமெரிக்க வீரர் வால்டர் டிக்ஸ் 10.08 வினாடிகளில் ஓடி வெள்ளி வென்றார். செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸைச் சேர்ந்த கிம் கோலின்ஸ் 10.09 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.

பரபரபாக எதிர்பார்த்த இந்த 100மீ ஓட்டத்தில் தவறு காரணமாக உசைன் போல்ட் தகுதியிழந்தது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உசைன் போல்ட் தற்போது 200மீ மற்றும் 4X100 மீ ஓட்டத்தில் தங்கம் பெற முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்