மீண்டும் சிறப்புக்குத் திரும்புவேண்- ஜாகீர் கான்

செவ்வாய், 4 அக்டோபர் 2011 (09:48 IST)
கணுக்கால் காயத்தில் இருந்து மெதுவாக குணமடைந்து வருகிறேன் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார் மேலும் சிறப்பான தனது பந்துவீச்சிற்கு விரைவில் திரும்புவேன் என்று ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் திங்கள்கிழமை விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கானின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜுனா விருதை ஜாகீர்கான் பெற்றுக் கொண்டார். முன்னதாக காயத்துக்கு சிகிச்சை எடுத்து வந்ததால் கடந்த ஆகஸ்ட் 29-ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அர்ஜுனா விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர், நாடு திரும்பினார். "எனது காயத்துக்கான முதல்கட்டசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. காயத்தில் இருந்து மெதுவாக குணமடைந்து வருகிறேன். குணமடைந்தபின் சில கிளப் போட்டிகளிலும், முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பேன்" என்றார் ஜாகீர் கான்.

ஆஸ்திரேலியா செல்லும் அணியில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு, எப்போது மீண்டும் விளையாடுவேன் என்று தேதி எதையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. ஆனால் விரைவில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவேன் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் ஹர்பஜன் சிங் அணியில் சேர்க்கப்படாதது குறித்த கருத்துத் தெரிவித்த ஜாகீர், இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிகவும் சிறந்தது. மிகச்சிறந்த பந்து வீச்சாளரான அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றார்.

இப்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர்கள் உமேஷ் யாதவ், ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன்.

சச்சின் எனது பந்து வீச்சைக் கண்டு பயந்தார் என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தனது சுயசரிதையில் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்துப் பேசுவதால் நேரம்தான் வீணாகும். இதில் உண்மை என்ன என்பது அனைவருக்குமே தெரியும் என்றார் ஜாகீர் கான்.

வெப்துனியாவைப் படிக்கவும்